Published : 25 Sep 2025 02:21 AM
Last Updated : 25 Sep 2025 02:21 AM
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சுமார் 12,000 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1 முதல் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும். இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்பதிவு தேவையில்லாத முற்றிலும் பொதுப் பெட்டிகளை கொண்ட 150 ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
செப்டம்பர் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் படிப்படியாக கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்டங்களில் 29-ல் 90 சதவீதத்திற்கு மேல் நேரம் தவறாமை எட்டப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயார் நிலையில் உள்ளது. இதன் மற்றொரு ரயில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
கூடுதலாக 1.5 கோடி பேர் பயணிக்கும் வகையில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7,724 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT