Published : 25 Sep 2025 12:40 AM
Last Updated : 25 Sep 2025 12:40 AM
புதுடெல்லி: ரயில்வேயில் பணியாற்றும் 10.91 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் போனஸ் வழங்கப்படும்.
இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்வேயில் பணியாற்றும் 10,91,146 ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,866 கோடி போனஸாக வழங்கப்படும். தகுதியான ரயில்வே ஊழியர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸாக கிடைக்கும்.
ரயில்வேயில் பணியாற்றும் தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், ரயில்வே அமைச்சக ஊழியர்கள் மற்றும் இதர சி பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும். இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT