Published : 24 Sep 2025 07:14 AM
Last Updated : 24 Sep 2025 07:14 AM
பாட்னா: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிஹாரில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஆர்ஜேடி கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் கூறுகையில், எங்களுக்கு 6 இடங்கள் போதும். அமைச்சர் பதவி தேவையில்லை என்றோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார். இந்நிலையில் பிஹாரில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை' என்ற பெயரில் 3 நாள் பிரச்சாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதன் மூலம் பிஹாரில் அவர் தனித்து போட்டியிடுவார் என்று தெரிகிறது. பிஹாரில் கடந்த 2020 தேர்தலில் ஒவைசி 25 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றார்.
இதுகுறித்து ஆர்ஜேடி வட்டாரங்கள் கூறுகையில், “சீமாஞ்சல் பகுதியில் ஒவைசி கட்சிக்கு இப்போது இடம் கொடுப்பது, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தர்பங்கா, மதுபானி உள்ளிட்ட பிற இடங்களில் அக்கட்சி இடங்களை கேட்க வழிவகுக்கும். மேலும் ஒவைசி கட்சியை எங்களுடன் சேர்த்தால், வரும் தேர்தலை இந்து - முஸ்லிம்கள் இடையிலான போட்டியாக பாஜக மாற்றிவிட வாய்ப்புள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT