Last Updated : 22 Sep, 2025 06:15 PM

5  

Published : 22 Sep 2025 06:15 PM
Last Updated : 22 Sep 2025 06:15 PM

டெல்லி கலவர வழக்கில் ஜாமீன் கோரி உமர் காலித் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு

உமர் காலித்

புதுடெல்லி: 2020-ல் டெல்லியில் நடந்த கலவர வழக்கில் ஜாமீன் கோரி உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் ஆகிய 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2020, பிப்ரவரியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில், கலவரத்தை திட்டமிட்டு கட்டமைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நடந்த கலவரத்தில் முக்கிய பாத்திரங்களை வகித்தது முதற்கட்ட பார்வையில் தெரியவந்துள்ளதாகக் கூறி கடந்த 2-ம் தேதி ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது. மேலும், நடந்தது வழக்கமான போராட்டம் அல்ல என்றும் அது நன்கு திட்டமிடப்பட்ட சதி என்றும் அரசு தரப்பு கூறியதை நீதிமன்றம் ஆதரித்தது.

இதையடுத்து, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுக்கள் மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அப்போது, உமர் காலித் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் உள்ளனர். எனவே, விசாரணை தேதியை தீபாவளிக்கு முன்பாக நிர்ணயிக்கக் கோருகிறேன். அப்போதுதான் அவர்கள் தீபாவளிக்குள் வெளியே வர முடியும்.” என வாதிட்டார்.

பாத்திமா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “குல்பிஷா பாத்திமா 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் ஒரு மாணவி. அவர் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க கோருகிறேன்.” என வலியுறுத்தினார். எனினும், முன்கூட்டியே விசாரணைக்கான வாய்ப்பை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x