Published : 21 Sep 2025 08:44 AM
Last Updated : 21 Sep 2025 08:44 AM
மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷில்பட்டா, நவி மும்பையில் உள்ள கன்சோலி இடையிலான 4.88 கி.மீ. நீள சுரங்கப்பாதை நேற்று தோண்டி முடிக்கப்பட்டது.
இதன்மூலம் இத்திட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல் எட்டப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இறுதி அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
புல்லட் ரயில் நடுத்தர வர்க்கத்தினருக்கான போக்குவரத்தாக இருக்கும். இதன் கட்டணங்கள் நியாயமானதாக இருக்கும். மும்பை - அகமதாபாத் பயண நேரத்தை 9 மணி நேரமாக கூகுள் மேப்ஸ் செயலி காட்டுகிறது. இந்த தூரத்தை புல்லட் ரயிலில் 2 மணி 7 நிமிடங்களில் கடக்க முடியும். புல்லட் ரயில் திட்டத்தில் சூரத்-பில்மோரா இடையிலான முதல் பிரிவு 2027 டிசம்பரில் தொடங்கப்படும்.
2028-ல் தானேவும் 2029-ல் பாந்த்ரா குர்லா காப்ளக்ஸும் இணைக்கப்படும். காலை, மாலை நெரிசல் நேரங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். இந்த வழித்தடம் முழுமை அடைந்தவுடன் நெரிசல் நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மும்பை - அகமதாபாத் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு தேவையில்லை. பயணிகள் ரயில் நிலையம் வந்து ரயிலில் ஏறிச் செல்லலாம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பாதையில் ஷில்பட்டாவில் இருந்து பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT