Published : 20 Sep 2025 05:14 PM
Last Updated : 20 Sep 2025 05:14 PM
வயநாடு: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இதில் எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விரைவில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.
கேரளாவின் வயநாட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை விரைவில் வெளிப்படுத்துவேன். அந்த ஆதாரம் இப்போதுள்ள நிலைமையின் யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும்.
ஏனென்றால், நாங்கள் சொல்வதற்கு எங்களிடம் திறந்த மற்றும் மூடிய ஆதாரம் உள்ளது. எனது முதல் மற்றும் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்புகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். எங்களிடம் கருப்பு - வெள்ளை ஆதாரம் உள்ளது. நாங்கள் ஆதாரமின்றி எதையும் சொல்லவில்லை. நடந்த பல விஷயங்களுக்கு எங்களிடம் 100% ஆதாரம் உள்ளது, இவை அனைத்தும் விரைவில் வெளிவரும். இந்த விவகாரங்களில் நான் என் வேலையை சரியாகச் செய்வேன்.
கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்றத் தொகுதி தொடர்பான ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்து அம்மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தி வருகிறது. வாக்குத் திருட்டு நடத்த பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை கர்நாடக சிஐடி கேட்டுள்ளது. ஆனால், கர்நாடக சிஐடி கேட்கும் தகவல்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழங்கவில்லை. அவர் மீது இதை விட பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருக்க முடியாது" என்று ராகுல் காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT