Published : 18 Sep 2025 08:55 AM
Last Updated : 18 Sep 2025 08:55 AM
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாரிடம் இந்தியாவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து தோஹாவில் அல் ஜசீரா ஊடகம் கேள்வி எழுப்பியது.
இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு, “இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தியா இது இருதரப்பு விஷயம் என்று கூறி திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பின்போது கூட இந்தியாவுடனான பேச்சுவார்த்தை பிரச்சினையை எழுப்பினேன். ஆனால், ரூபியோ, இது இருதரப்பு பிரச்சினை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்துவிட்டார். இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எந்தவொரு மத்தியஸ்தத்தையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. அதனை ஏற்கவில்லை. இவ்வாறு இஷார் தார் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா மூன்றாம் தரப்பின் பங்கை நிராகரித்துவிட்டதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்த நடவடிக்கையில் மூன்றாம் தரப்பு தலையீடு இருந்ததாக இந்தியாவின் பிம்பத்தை குறைத்து மதிப்பிட்டு பிரச்சாரம் நடத்தியவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT