Published : 17 Sep 2025 08:21 AM
Last Updated : 17 Sep 2025 08:21 AM
புவனேஸ்வர்: ஒடிசாவில், தனது காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், பெட்னோட்டி ஒன்றியம் கண்டதேயுலா என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இறைவணக்க கூட்டத்துக்கு பிறகு மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பறைகளுக்கு சென்று, பிரார்த்தனைக்கு பிறகு தனது காலை ஏன் தொட்டு
வணங்கவில்லை என்று கேட்டு 31 மாணவர்களை மூங்கில் குச்சியால் அடித்து உள்ளார். இதுபற்றி தெரியவந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று, அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்களிடம் உள்ளூர் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அந்த ஆசிரியையை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியாக தண்டனை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்தப் பள்ளியிலும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT