Published : 15 Sep 2025 08:42 AM
Last Updated : 15 Sep 2025 08:42 AM
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை (இன்று) ஆஜராக வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என நடிகை ஊர்வசி ரவுதேலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 1xBet நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மிமி சக்கரவர்த்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 22 கோடி பேர் சூதாட்ட செயலிகளை பயன்படுத்துவதாகவும் இதில் பாதி பேர் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் இத்துறை சாந்த அமைப்புகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இத்துறையின் சந்தை மதிப்பு ரூ.8.82 லட்சம் கோடி ஆகும். இது ஆண்டுதோறும் 30% அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT