Published : 14 Sep 2025 07:26 AM
Last Updated : 14 Sep 2025 07:26 AM
ஹைதராபாத்: தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் தெலங்கானா மாநில போலீஸாரிடம் நேற்று சரண் அடைந்தார்.
தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போதுலா கல்பனா என்கிற சுஜாதக்கா (62). இவர் மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் உள்ள பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஆவார். மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அம்மாநில போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான கிஷண் ஜி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுஜாதக்காவின் கணவர்தான் இந்த கிஷண்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜாதக்கா, சத்தீஸ்கர் மாநில தெற்கு துணைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் மீது 106 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிக்கப்படும் என மேற்கு வங்கப் போலீஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சுஜாதக்கா, நேற்று தெலங்கானா போலீஸ் டிஜிபி ஜிதேந்தர் முன்னிலையில் சரண் அடைந்தார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டிஜிபி ஜிதேந்தர் கூறுகையில், “1996-ல் சுஜாதக்கா, மாவோயிஸ்ட் பிரிவு கமாண்டராக செயல்பட்டு வந்துள்ளார். 2001-ல் தெலங்கானா மண்டல மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இப்போது அவர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போலீஸில் சரண் அடைந்துள்ளார். தனக்கு மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரைப் போலவே இருக்கும் மாவோயிஸ்ட்களும் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைய முன்வரவேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT