Published : 14 Sep 2025 07:08 AM
Last Updated : 14 Sep 2025 07:08 AM
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் சாதனம், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஏவிய பிஎல்-15 என்ற சீனா தயாரிப்பு ஏவுகணைகளை திசை திருப்பியது. இதனால் ரஃபேல் போர் விமானங்களை மீண்டும் வாங்க விமானப்படை விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்கலாம் எனவும் விமானப்படை கூறியுள்ளது. இதுகுறித்து, பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படையில் ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. இந்நிலையில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்த 36 ரஃபேல்-எம் ரக விமானங்கள் வாங்கவும் பிரான்ஸிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டால், இந்தியாவிடம் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக அதிகரிக்கும்.
ரஃபேல் போர் விமானத்தின் எம்-88 இன்ஜின்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும், ஹைதராபாத்தில் மையம் அமைக்க டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், டாடா நிறுவனமும், டஸ்ஸோ நிறுவனமும் இணைந்து ரஃபேல் விமான தயாரிப்பில் ஈடுபடும். அப்போது அதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT