Published : 13 Sep 2025 07:39 AM
Last Updated : 13 Sep 2025 07:39 AM
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான (கிரெடாய்) சார்பில் சிங்கப்பூரில் கடந்த 11-ம் தேதி சிறப்பு கண்காட்சி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
அங்கு அவர் கூறியதாவது: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஏராளமானோர் வேலை இழந்து உள்ளனர். குறிப்பாக குஜராத்தின் சூரத் நகரில் வைரம், தங்க நகை தொழிலில் ஈடுபட்டிருந்த 1.35 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர். இதேபோல மீன் ஏற்றுமதி, உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர்.
அமெரிக்க அதிபராக 45 பேர் பதவி வகித்து உள்ளனர். ஆனால் யாரும் ட்ரம்ப் போன்று இல்லை. அவரின் மனநிலை அடிக்கடி மாறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று எந்தவொரு உலகத் தலைவரும் பகிரங்கமாக கோரவில்லை. ஆனால் அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக நோபல் பரிசை கோருகிறார்.
ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. ஆனால் இந்தியா மீது மட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதிக்கிறார். இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை ஆகும். இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் குறித்த மிகவும் அநாகரிகமாக அவர் பேசி உள்ளார். இதுபோன்று எந்தவொரு உலகத் தலைவர்களும் பேச மாட்டார்கள்.
அமெரிக்காவுக்கு மாற்றாக இதர நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் பிரிட்டனுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீனாவுக்கு சென்றார். இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு வலுவடையும். இதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருகிறார். இந்திய, ரஷ்ய உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT