Last Updated : 12 Sep, 2025 07:11 PM

3  

Published : 12 Sep 2025 07:11 PM
Last Updated : 12 Sep 2025 07:11 PM

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு செப்.22-ல் புதிதாக தொடங்கும்: சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை கர்நாடகாவில் சமூக - பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பு புதிதாக நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். மேலும், 2015-ல் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் சித்தராமையா, “கடைசியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டதால், சமூகத்தின் தற்போதைய யதார்த்தங்களை கண்டறிய ஒரு புதிய கணக்கெடுப்பு அவசியமாகிவிட்டது.

சமூகத்தில் பல மதங்களும், சாதிகளும் உள்ளன. பன்முகத்தன்மையும் சமத்துவமின்மையும் உள்ளன. அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்றும், சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும், ஜனநாயகத்துக்கு வலுவான அடித்தளங்களை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான படியாகும்” என்றார்.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கோடி வீடுகளில் கிட்டத்தட்ட 7 கோடி மக்கள்தொகையை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான வீட்டு அடையாள ஸ்டிக்கர் வழங்கப்படும், இதுவரை 1.55 கோடி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குடும்பங்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி நிலை குறித்த விவரங்களைப் பதிவு செய்ய 60 கேள்விகள் கொண்ட ஒரு கேள்வித்தாள் நிர்வகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பை மேற்கொள்ள, தசரா விடுமுறையின்போது 1.85 லட்சம் அரசு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை மதிப்பூதியம் கிடைக்கும். இதற்கு மாநிலம் ரூ.420 கோடியை ஒதுக்கியுள்ளது என கர்நாடக அரசு அறிவித்தது. இந்த கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை டிசம்பர் 2025-க்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 சாதிவாரி கணக்கெடுப்பின்போது ரூ.165 கோடி செலவு செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து முதல்வர் சித்தராமையா பேசுகையில், "மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இந்த கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாகவும், உங்கள் சிறந்த அறிவின்படியும் பதிலளிக்கவும் வேண்டும். நீங்கள் தயார் செய்ய உதவுவதற்காக, பணியாளர்கள் விண்ணப்பப் படிவத்தை வழங்க முன்கூட்டியே உங்கள் வீட்டுக்கு வருவார்கள்.

சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், சமத்துவமின்மை நீடிக்கிறது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த, இந்த ஏற்றத்தாழ்வுகளை நாம் அகற்ற வேண்டும். எனவே இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அனைவருக்கும் பயனுள்ள நலத்திட்டங்களை வடிவமைக்க தேவையான தரவுகளை வழங்கும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x