Published : 11 Sep 2025 01:55 PM
Last Updated : 11 Sep 2025 01:55 PM
பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி ஏற்பாடு செய்த ரத யாத்திரையை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தொடங்கி வைத்தது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
துமகுரு மாவட்டத்தின் திப்தூரில் ஏபிவிபி அமைப்பு ஏற்பாடு செய்த ராணி அபக்கா சவுதா ரத யாத்திரை மற்றும் ஜோதி ஊர்வலம் ஆகியவற்றை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மற்றும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் கட்சி அடிக்கடி விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்த சூழலில், ஏபிவிபி ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியை காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான பரமேஸ்வரா தொடங்கி வைத்தது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்தை தூண்டியுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பரமேஸ்வராவும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடலோர கர்நாடகாவை சேர்ந்த ராணி அப்பாக்கா, இந்தியாவின் ஆரம்பகால சுதந்திரப் போராளிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். 16 ஆம் நூற்றாண்டில் அவர் போர்த்துகீசியர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை நினைவுகூரும் வகையில் ஏபிவிபி நீண்ட காலமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT