Last Updated : 10 Sep, 2025 12:14 PM

7  

Published : 10 Sep 2025 12:14 PM
Last Updated : 10 Sep 2025 12:14 PM

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 'மனசாட்சியுடன்' வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி என்று பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. மீதமுள்ள 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

நேற்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் 315 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் இது முன்னோடியில்லாத 100% வாக்குப்பதிவு என தெரிவித்திருந்தார்.

ஆனால், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால், இண்டியா கூட்டணி எம்பிக்கள் சிலர் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அவர்களில் சிலர் செல்லாத வாக்குகளாக அளித்துள்ளனர். இதுவும் ஆளும் கூட்டணிக்கு மறைமுக ஆதரவாகவே இருந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டும் வகையில் கிரண் ரிஜிஜு இன்று வெளியிட்டுள்ள பதிவில், ”குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நன்றி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எங்கள் நட்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக பணிவான, திறமையான, உண்மையான தேசபக்தரை தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களிப்பு நடந்தது. இண்டியா கூட்டணி அதன் எண்ணிக்கையைவிட 15 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்தார்கள். அதன் பலன் அவர்களுக்கு கிடைத்துள்ளது.” என கிண்டல் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x