Published : 04 Sep 2025 09:13 AM
Last Updated : 04 Sep 2025 09:13 AM
புதுடெல்லி: அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் சிஆர்பிஎப். வீரர்கள், சத்தீஸ்கர் மாநில காவல்துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கைக்கு அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்டின் போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக நினைவுகூரப்படும். தொடர்ச்சியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பாதுகாப்புப் படையினர் மிகுந்த மன உறுதியுடன் நடவடிக்கையை மேற்கொண்டு பெரிய நக்சல் தள முகாமை வெற்றிகரமாக அழித்தனர்.
கர்ரேகுட்டா மலையில் நிறுவப்பட்ட நக்சல்களின் கிடங்கு, விநியோகச் சங்கிலியை சத்தீஸ்கர் காவல்துறை, சிஆர்பிஎஃப், டிஆர்ஜி மற்றும் கோப்ரா பணியாளர்கள் வீரத்துடன் அழித்தது பாராட்டுக்குரியது. நாட்டின் வளர்ச்சியடையாத சில பகுதிகளில் நக்சல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை சீர்குலைந்துள்ளனர். மேலும் அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
தொடர்ச்சியான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பகுதியில் உள்ள சுமார் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு ‘‘புதிய சூரிய உதயம்’’ ஏற்பட்டுள்ளது. நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கடுமையான காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்க பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.
வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் 20 நக்சல்கள் சரண்:
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் சவாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மாவில் 9 பெண்கள் உள்ளிட்ட 20 நக்சலைட்கள், போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 11 பேருக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. நக்சலைட்களின் வலிமையான அமைப்பாக கருதப்படும் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் (பிஎல்ஜிஏ) பட்டாலியன் 1-ன் முக்கிய நக்சலைட் ஒருவரும் சரண் அடைந்துள்ளார்.
வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் மற்றும் தங்கள் அமைப்புக்குள் வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் ஏமாற்றம் அடைந்ததாக இவர்கள் கூறுகின்றனர். மேலும் சத்தீஸ்கர் அரசின் உங்கள் நல்ல கிராமம் திட்டத்தாலும் இவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். சரண் அடைந்த அனைத்து நக்சலைட்களுக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு கிரண் சவாண் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT