Last Updated : 01 Sep, 2025 06:35 PM

 

Published : 01 Sep 2025 06:35 PM
Last Updated : 01 Sep 2025 06:35 PM

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளைக்குள் (செப்.2) வீதிகளை காலி செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கி நடத்தி வருகிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மும்பை வந்துள்ள ஆதரவாளர்கள் ஆசாத் மைதானம் மட்டுமின்றி, சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மற்றும் பொது இடங்களில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும், மராத்தா போராட்டம் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வீரேன் ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு, போராட்டம் அமைதியாக இல்லை என்றும் அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜரங்கேவும், அவரது ஆதரவாளர்களும் நாளை (செப்.2) நண்பகலுக்குள் வீதிகளை காலி செய்ய வேண்டும். வீதிகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

போராட்டம் எவ்வளவு 'அமைதியாக' நடைபெறுகிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். உயர் நீதிமன்ற கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான நுழைவு வாயில்கள் தடுக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்றத்துக்குள் வருவதை தடுத்தன. முழு நகரமும் தடுக்கப்பட்டுள்ளது.

ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தை நடத்தவில்லை. எனவே, மகாராஷ்டிர அரசு சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மாநில அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மும்பையைவிட்டு வெளியேறப் போவதில்லை என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் ஜராங்கே கூறி இருப்பது தெளிவான ஓர் அச்சுறுத்தல். ஆகஸ்ட் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானத்தில் அமர்ந்து போராடலாம். வேறு பகுதிகளில் போராடக்கூடாது" என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x