Published : 01 Sep 2025 04:52 AM
Last Updated : 01 Sep 2025 04:52 AM
புதுடெல்லி: வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்படும் ‘பகு கான்’ என்ற தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நசேரா நர் என்ற இடத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தீவிரவாத ஊடுருவல் முயற்சி நடைபெறுவதை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதையறிந்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பகு கான் என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர் என்பது தெரிந்தது. இவர் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1995-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்ற பகு கான், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெற்றார். அதன் பின் பல தீவிரவாத அமைப்புகளுக்காக பணியாற்றினார்.
இவருக்கு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைத்து இடங்கள், மறைவிடங்கள், ஊடுருவல் பாதைகள் ஆகியவை நன்றாக தெரியும். இதனால் இவர் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு வழிகாட்டியாக 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்துள்ளார்.
காஷ்மீரில் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல்களுக்கு பகு கான் உதவியவர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த ஊடுருவலை குறைக்கும் என பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர். பகு கான் போன்ற வழிகாட்டிகள் மூலம் 70 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் இருக்கலாம் என ராணுவத்தினர் மதிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்று, சிறு குழுக்களாக இரிடியம் செயற்கைக்கோள் போன்கள் மற்றும் தெர்மல் இமேஜெரி கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் காஷ்மீருக்குள் நுழைகின்றனர்.
காஷ்மீரில் இந்தாண்டு மட்டும் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் 3 பேர் உட்பட 16 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT