Published : 30 Aug 2025 05:18 PM
Last Updated : 30 Aug 2025 05:18 PM
விசாகப்பட்டினம்: ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "மிக விரைவில், தென்னிந்தியாவிற்கு புல்லட் ரயில் வர உள்ளது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும்.
ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர், இது உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும், மிகப்பெரிய சந்தையாகவும் மாறவுள்ளது. இது விரைவில் நடக்கப் போகிறது. அது நடக்கும்போது, அதன் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும்" என்றார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றினேன். தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகள், செழிப்பான தொழில் குழுக்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவின் உணவு பதப்படுத்தும் புரட்சியை ஊக்குவிப்பதில் ஆந்திரப் பிரதேசம் பெருமை கொள்கிறது.
ரூ.9,000 கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகள் மற்றும் தேசிய உற்பத்தியில் 9% பங்களிப்புடன், நமது மாநிலத்தை இந்தியாவின் உணவு பதப்படுத்தும் மையமாக நிலைநிறுத்தியுள்ளோம். எனவே, உலகளாவிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஆந்திரப் பிரதேசத்துடன் வளர அழைக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT