Last Updated : 30 Aug, 2025 04:00 PM

2  

Published : 30 Aug 2025 04:00 PM
Last Updated : 30 Aug 2025 04:00 PM

''இந்தியா ஒருபோதும் தலைவணங்காது'' - அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதிலடி

புதுடெல்லி: இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது என்று அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது. நாங்கள் தொடரந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஒவ்வொரு துறையையும் ஆதரிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வரும் நாட்களில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவிக்கும். 2025-26 நிதி ஆண்டின் இந்திய ஏற்றுமதி, 2024-25ஐ காட்டிலும் அதிகமாக இருக்கும். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என தெரிவித்துள்ளார். அமெரிக்கா விதித்த கூடுதல் 25 சதவீத வரி கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, பியூஷ் கோயல் முதல்முறையாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து 50 சதவீதமாக உயர்த்தினார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால், இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தற்போது தடைபட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில், “உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்பு சட்டவிரோதமானது. கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.

வரிகள் விதிப்பு, அடிப்படையில் காங்கிரஸின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது வரி விதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. எனினும், வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு காங்கிரஸ் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு முமையான பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் அது அமெரிக்காவை அழித்துவிடும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x