Published : 24 Aug 2025 11:39 AM
Last Updated : 24 Aug 2025 11:39 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் செயல்படும் ஏராளமான பள்ளிக்கூடங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ் லாமியின் பலே-இ-ஆம் அறக்கட்டளையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
அத்தகைய பள்ளிகளின் நிர்வாகக் குழுவை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையர் நடவடிக்கை எடுப்பார். ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு புதிய நிர்வாகக் குழுவை அவர் முன்மொழிவார். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையர் பள்ளிக் கல்வித் துறையின் ஆலோசனைப்படி செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்றனர். அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்த அக்குழுவினர், பள்ளி நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT