Published : 24 Aug 2025 06:23 AM
Last Updated : 24 Aug 2025 06:23 AM
புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி (நாளை) முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதவிர, தற்போது தபால் சேவைக்கான சுங்க கட்டணத்திலும் அமெரிக்கா மாற்றம் செய்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பார்சல்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு தபால்களை எடுத்துச் செல்வதில் கட்டணக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அளவுக்கு கட்டணங்களை வசூலிப்பது என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தபால்களை ஏற்க அமெரிக்காவுக்கு விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.இதையடுத்து ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவைகளை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியா போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூலை 30 -ம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வரும் ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருள்களும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின்படி (ஐஇஇபிஏ) சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப் பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இதர பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும். வரும் 25-ம் தேதி முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்துக்கு தபால் துறை மிகவும் வருந்துகிறது. மேலும் அமெரிக்காவுக்கான முழு சேவைகளையும் விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேபோல, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT