Last Updated : 22 Aug, 2025 03:06 PM

10  

Published : 22 Aug 2025 03:06 PM
Last Updated : 22 Aug 2025 03:06 PM

இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு

பாட்னா: அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிஹாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பு இது. இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது.’ என்று கூறினார்.

பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரதமர் மோடி 2-வது முறையாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் இருந்தனர்.

தொடர்ந்து கயாஜியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இதனையடுத்து பிரதமர் பேசியதாவது: ஓர் அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டால். அடுத்த 50 மணி நேரத்தில் அவரது வேலை பறிபோகிறது. ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர், ஏன் பிரதமர் கூட சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தலாம். சில நாட்களுக்கு முன்னர் நாம் சிறையிலிருந்து அரசு உத்தரவுகள் பறந்ததைப் பார்த்தோம். தலைவர்களுக்கு இதுபோன்ற மனப்பாண்மை இருந்தால், நாம் ஊழலை எப்படி ஒழிப்பது. அதனால் தான் நாம் ஊழலுக்கு எதிரான இந்த புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். அந்த வரம்புக்குள் பிரதமரும் வருகிறார்.

ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகள்தான் தங்களது பதவிகளை இழக்க வேண்டும். எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகளே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் கூறினார்.

ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முதல்நாள் இந்தக் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மக்கள் வெறும் வாக்கு வங்கி அல்ல - பதவி பறிப்பு மசோதாவைத் தாண்டி பேசிய பிரதமர், “பிஹார் எனும் புனித பூமியில் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானமும் வீண் போகாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றுப்பட்டது

ஆனால், பிஹார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களின் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x