Published : 22 Aug 2025 07:28 AM
Last Updated : 22 Aug 2025 07:28 AM
புதுடெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது அக்னி-5 ஏவுகணை. அணு ஆயுதங்களுடன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது.
இந்த ஏவுகணை ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அடுத்ததாக 7,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் வகையில் அக்னி ஏவுகணையை மேம்படுத்தும் முயற்சியில் டிஆர்டிஓ இறங்கியுள்ளது.
பாகிஸ்தான் பதற்றம்: அக்னி-5 ஏவுகணையை இந்தியா மீண்டும் வெற்றிகரமாக சோதித்தது பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள எஸ்விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்) என்ற சிந்தனை அமைப்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் 8,000 கி.மீ செல்லும் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கும்போது அவற்றின் மூலம் அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யாவின் மாஸ்கோ ஆகிய நகரங்களை தாக்க முடியும். எனவே, பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு பதிலாக பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும் என இந்தியாவை உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என எஸ்விஐ கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT