Published : 21 Aug 2025 08:08 AM
Last Updated : 21 Aug 2025 08:08 AM
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும், பெயர் மற்றும் பாலினத்தை ஒரு மாதத்துக்குள் மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்தவர் பியான்சி லாய்ஷ்ராம். இவர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்துவர். போபாய் லாய்ஷ்ராம் என்ற பெயரில் ஆணாக இருந்தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாகி மாறி அந்த சான்றிதழ் மூலம் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டுகளை பெற்றார்.
ஆனால் இவரது பள்ளி கல்விச் சான்றிதழ்களில் எல்லாம் இவரது பெயர் போபாய் லாய்ஷ்ராம் என்றும், பாலினம் ஆண் என்றும் உள்ளது. அவை அனைத்திலும் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித்தரும்படி இவர் கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
திருநங்கைகள் பாதுகாப்பு உரிமை சட்ட விதிமுறைகள் படி, கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும் பெயர் மற்றும் பாலினம் மாற்றம் செய்ய பியான்சிக்கு உரிமை உள்ளது என அவரது வழக்கறிஞர் ஜெய்னா கொத்தாரி வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட மணிப்பூர் உயர் நீதிமன்றம் திருநங்கையாக மாறியவரின் பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து சான்றிதழ்களிலும் பெயர் மற்றும் பாலின மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதுகுறித்து பியான்சி கூறுகையில், ‘‘நான் படிக்கும் காலத்தில் எனது சான்றிதழ்களில் எனது பாலினம் ஆண் என இருந்ததால், ஆண்கள் விடுதியில் தங்கினேன். அப்போதெல்லாம் எனக்கு அச்சமாக இருக்கும். தற்போது நான் அடையாள குழப்பம் இல்லாம் எனது பணியை தொடர முடியும் என்பதால் இந்த தீர்ப்பு எனக்கு நிம்மதியை அளித்துள்ளது. நான் அறுவை சிகிச்சை அல்லது மகப்பேறு மருத்துவத்தில் நிபுணராக திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.பியான்சி லாய்ஷ்ராம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT