Published : 20 Aug 2025 07:40 AM
Last Updated : 20 Aug 2025 07:40 AM
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 ஆயிரத்து 330 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 26,195 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தமாக விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT