Published : 18 Aug 2025 12:12 AM
Last Updated : 18 Aug 2025 12:12 AM
புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர்இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஜே.பி. நட்டா கூறும்போது, ‘‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார்’’ என்று தெரிவித்தார். தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), தமிழகத்தை சேர்ந்தவர். திருப்பூரில் கடந்த 1957-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தார். 16 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்தார்.
கடந்த 1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
தேர்தல் நடைமுறைகள்: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் பரிசீலனை 22-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள். ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
இண்டியா கூட்டணி வேட்பாளர்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இண்டியா கூட்டணியின் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதன்படி அந்த கூட்டணியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஆர் வெற்றி பெறுவது உறுதி: தற்போது மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன்படி, 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும்வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்த கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT