Published : 15 Aug 2025 06:50 AM 
 Last Updated : 15 Aug 2025 06:50 AM
பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்ததாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி கன்னட நடிகர் தர்ஷன் (44) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்ஷனின் முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக கடந்த அக்டோபரில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பரில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு நேற்று தீர்ப்பை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பவித்ரா கவுடா, இரண்டாவது குற்றவாளியான தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது.
கர்நாடக உயர் நீதிமன்றம் எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது என தெரியவில்லை. விசாரணையை பாதிக்கும் என்பதை கருதாமல், மேலோட்டமாக அவசர கதியில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT