Published : 13 Aug 2025 09:06 AM
Last Updated : 13 Aug 2025 09:06 AM
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் பாதி எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்மாவை பணியிட மாற்றம் செய்தார்.
இதுகுறித்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒரு குழு அமைத்தார். அக்குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் வஸ்தவா மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT