Published : 13 Aug 2025 07:04 AM
Last Updated : 13 Aug 2025 07:04 AM
ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள ஒரு வங்கியில் பட்டப்பகலில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிடோலா பகுதியில் இசாஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கிளை இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் 6 கொள்ளையர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் இந்த வங்கிக்கு வந்தனர். இவர்களில் 4 பேர் முகத்தை மறைப்பதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பிறகு துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சில நிமிடங்களில் தப்பிச் சென்று விட்டனர்.
கொள்ளை நடந்த நேரத்தில் மேலாளர் உட்பட வங்கியில் 6 ஊழியர்கள் இருந்தனர். பண்டிகை காலத்துக்காக வேலை நேரத்தில் சமீபத்திய மாற்றங்கள் காரணமாக, அந்த நேரத்தில் வங்கியில் பாதுகாப்பு காவலர் யாரும் பணியில் இல்லை.
வங்கி ஊழியர்களை சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் பிறகு துப்பாக்கிகளை எடுத்து சுடப்போவதாக மிரட்டியுள்ளனர். பிறகு ஊழியர்களை கட்டாயப்படுத்தி வங்கி லாக்கரில் 14.8 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த கிதாவ்லி காவல் நிலைய போலீஸார், மாவட்ட எல்லைகளுக்கு 'சீல்' வைத்து, அண்டை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT