Published : 13 Aug 2025 01:21 AM
Last Updated : 13 Aug 2025 01:21 AM
புதுடெல்லி: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “5 கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை 2.5 மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை ரேசன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள் அதிகம் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி ஆகியோர். “ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம். விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதற்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டும்” என்றனர். வழக்கு விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அமிர் போர்கர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருக்கும் ஒருவரை இந்திய குடிமகனாக முடியாது. இந்த ஆவணங்கள் அடையாள ஆவணங்கள் மட்டுமே” என்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT