Published : 10 Aug 2025 07:20 AM
Last Updated : 10 Aug 2025 07:20 AM
புதுடெல்லி: நாட்டின் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலானது 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள இதற்கு ருத்ராஸ்த்ரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: ருத்ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 354 வேகன்களைக் கொண்ட இந்த ரயில் நாட்டின் மிக நீளமான சரக்கு ரயிலாக இருக்கும். 4.5 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டதாகவும், மிகச்சிறப்பாகவும் இந்த ரயில் உள்ளது.
உத்தர பிரதேசத்தின் கஞ்ச்கவாஜா ரயில் நிலையத்தில் இருந்து இது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ரயில் 7 இன்ஜின்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது உலகின் மீக நீளமான 2-வது சரக்கு ரயிலாக உள்ளது. உலகின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் பிஎச்பி(7.3 கிலோ மீட்டர் நீளம், 682 வேகன்கள்) பெற்றுள்ளது. ருத்ராஸ்த்ரா ரயில் சராசரியாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று 5 மணி நேரத்தில் 200 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்கும். நேரத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த ரயிலை இயக்குவதற்கான செலவும் குறைவு. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT