Published : 08 Aug 2025 08:18 AM
Last Updated : 08 Aug 2025 08:18 AM
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறையாக சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆய்வறிக்கையை அங்கீகரிக்காமல், திருத்தம் கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT