Published : 07 Aug 2025 12:03 PM
Last Updated : 07 Aug 2025 12:03 PM
புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது.
இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்த நிலையில், அது குறித்து உண்மையை அறிய அப்போதைய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, குழு ஒன்றை அமைத்தார்.
மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இருந்தனர். இக்குழு தனது அறிக்கையை மே 3 அன்று இறுதி செய்தது.
இதையடுத்து, அப்போதைய தலைமை நீதிபதி கன்னா, நீதிபதி வர்மாவிடமிருந்து பெறப்பட்ட பதிலுடன் குழுவின் அறிக்கையையும் சேர்த்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாசிஹ் அமர்வு, உள் விசாரணைக் குழுவின் அமைப்பும், அதைத் தொடர்ந்து வந்த விசாரணை நடைமுறையும் சட்டவிரோதமானது அல்ல என்று தெரிவித்தனர்.
மேலும், “பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பதற்கு நாங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம்” என்று கூறியது. இதனையடுத்து, உள் விசாரணை குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT