Published : 05 Aug 2025 08:18 AM
Last Updated : 05 Aug 2025 08:18 AM
புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதில் பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும். இந்த கூட்டம் கடந்தாண்டு மக்களவை தேர்தல் தோல்விக்குப்பின், நடைபெறும் இண்டியா கூட்டணியின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை நோக்கி வரும் 8-ம் தேதி பேரணி செல்லவும் இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், அரசியல் சாசன விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மீறுவதாகவும் இண்டியா கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ராகுல் தலைமையில் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள இதர கட்சி தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்த கூட்டம் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT