Published : 05 Aug 2025 07:32 AM
Last Updated : 05 Aug 2025 07:32 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது ஆகும். இது தென் மாநில மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது போன்றது ஆகும்” என கூறியிருந்தார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 19(பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் தங்கியிருக்கும் எவரும் (சொந்த வீடு இல்லாவிட்டாலும்) அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ள உரிமை உள்ளது.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் தற்காலிகமாக வசித்து வந்தாலும் அவர் அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். இதுபோல, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும் இங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும்.
எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT