Published : 05 Aug 2025 06:49 AM
Last Updated : 05 Aug 2025 06:49 AM
புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பியதையடுத்து நேற்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதுவரை பல லட்சம் பேர் வாக்காளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவை செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கி வருகின்றன .
நேற்று மக்களவை கூடியபோது பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன. அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில், ‘‘கடந்த காலத்தில் நான் செய்தது போல் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களது பிரச்சினைகளை எழுப்ப போதுமான நேரம் தருவேன், ஆனால் தயவுசெய்து சபையை நடத்த அனுமதிக்கவும்’’ என்று ஓம் பிர்லா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சபாநாயகரின் வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் பிற்பகல் 2 மணி வரை சபையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் எழுந்து நின்று கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT