Published : 04 Aug 2025 06:07 PM
Last Updated : 04 Aug 2025 06:07 PM
புதுடெல்லி: ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார்.
மனைவி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் புதுடெல்லி வந்தடைந்த பிலிப்பைன்ஸ் அதிபரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.
நாளை ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிலிப்பைன்ஸ் அதிபர், அதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார். அப்போது, இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். மேலும், இரு நாடுகளின் குழுக்களுக்கு இடையேயான ஆலோசனையும் நடைபெற உள்ளது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உடனான சந்திப்பை அடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் சந்தித்துப் பேச உள்ளார். ,
இந்தியா - பிலிப்பைன்ஸ் இடையேயான ராஜ்ஜிய உறவு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டை முன்னிட்டு, அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். அவரது இந்த பயணத்தின்போது, பெங்களூரு செல்ல உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT