Published : 03 Aug 2025 12:53 PM
Last Updated : 03 Aug 2025 12:53 PM
சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ பிஹாரின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திகைப்பூட்டுவதாக மாறி வருகிறது.
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானது. 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்' என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும், தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் பெரிய அளவில் தலையிடும் செயலாகும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி பிஹார் அல்லது அவரது சொந்த மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஏன் திரும்பி செல்லக்கூடாது?. சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளி பிஹாருக்குத் செல்லவில்லையா?.
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிஹாரில் அல்லது வேறு மாநிலத்தில் அத்தகைய வீடு உள்ளது. அவர் எப்படி தமிழ்நாட்டில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?.
புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக குடியேறியவர்" என்று எப்படி கருத முடியும்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தின் மூலம் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT