Last Updated : 30 Jul, 2025 02:58 PM

8  

Published : 30 Jul 2025 02:58 PM
Last Updated : 30 Jul 2025 02:58 PM

ட்ரம்ப் பொய் சொல்வதாக மோடி கூறிவிட்டால் முழு உண்மையும் வெளிவந்துவிடும்: ராகுல்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து அமெரிக்கா நடத்திய பேச்சவார்த்தையே காரணம் என 20 முறைக்கும் மேலாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இதனை இதுவரை ஏற்கவில்லை.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் நேற்று விளக்கம் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்துமாறு உலகின் எந்த ஒரு தலைவரும் கூறவில்லை. மே 9-ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ள முயன்றார். ஒரு மணி நேரம் அவர் முயன்றார். அப்போது நான் நமது ராணுவத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். எனவே, அவரது தொலைபேசி அழைப்பை நான் எடுக்கவில்லை.

பிறகு நான் பேசியபோது, மிகப் பெரிய தாக்குதலை தொடுக்க பாகிஸ்தான் திட்டமிடுகிறது என என்னிடம் அவர் தெரிவித்தார். அதற்கு நான், பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்குமானால், எங்கள் தாக்குதல் அதைவிட பெரியதாக இருக்கும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். எனது பதில் அதுவாகத்தான் இருந்தது” என தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்வதாக பிரதமர் மோடி கூறவில்லை. என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர்களால் அதைச் சொல்ல முடியவில்லை. அதுதான் பிரச்சினை. டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரதமர் மோடி பேசிவிட்டால் அதன் பிறகு அனைத்தையும் ட்ரம்ப் கூறிவிடுவார். அனைத்து உண்மையும் வெளிவந்துவிடும். அதனால்தான், பிரதமர் மோடி தவிர்க்கிறார்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x