Published : 30 Jul 2025 11:26 AM
Last Updated : 30 Jul 2025 11:26 AM
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டாரின் கல்சியன்-குல்பூர் பகுதியில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இது குறித்து இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிவசக்தி மூலமாக, இந்திய ராணுவத்தின் படைகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் பங்களித்ததாகவும், தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்களிடமிருந்து மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடத்திய `ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் சுலைமான் என்கிற ஃபைசல், ஹம்சா அப்ஹான், ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் சுலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான், ஹம்சா அப்ஹான் இருவரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சோனமார்க் சுரங்கப்பாதை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜிப்ரான் மற்றும் ஹம்சா அப்ஹான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT