Published : 29 Jul 2025 07:33 AM
Last Updated : 29 Jul 2025 07:33 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட், குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்றிதழில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
இந்த சான்றிதழில் பிஹார் வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் கையெழுத்திட்டு உள்ளார். அரசு அலுவலகத்தின் கவுன்ட்டர் மூலமாக நேரடியாக வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் நாயின் புகைப்படமும் அச்சிடப்பட்டு உள்ளது.
இந்த குடியிருப்பு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை பிஹார் வருவாய் துறை நேற்று ரத்து செய்தது.
மேலும் நாயின் பெயரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. தவறிழைத்த அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு சான்றிதழை தயார் செய்த கணினி ஊழியர், கையெழுத்திட்ட வருவாய் அதிகாரி மற்றும் அடையாளம் தெரியாத விண்ணப்பதாரர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியர் டாக்டர் தியாகராஜன் கூறும்போது, ‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, தவறிழைத்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது இந்திய குடியுரிமையை நிரூபிக்க குடியிருப்பு சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தற்போது பாட்னாவில் ஒரு நாய், குடியிருப்பு சான்றிதழை பெற்றிருக்கிறது. மோசடி வழியில் ஆதார், ரேஷன் அட்டைகளை பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. தற்போது பிஹாரில் நாய்க்கு குடியிருப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT