Published : 28 Jul 2025 07:07 AM
Last Updated : 28 Jul 2025 07:07 AM
கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஜேஜேஎம்பி அமைப்பை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் பலத்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘லாவாடேக் வனப் பகுதியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காக்ரா போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்த அந்த சண்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய 2 மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது’’ என்றனர்.
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டர் குறித்து பஸ்தார் மண்டல ஐஜிபி பி சுந்தர்ராஜ் கூறும்போது, ‘‘என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து இதுவரை 4 மாவோயிஸ்ட்கள் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT