Published : 27 Jul 2025 07:19 AM
Last Updated : 27 Jul 2025 07:19 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு ஆணையம் இது தொடர்பான பரிந்துரையை மாநில கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. அதில், “10-ம் வகுப்பில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதிலாக 30 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம். மொத்த மதிப்பெண்ணில் 625-க்கு 33 சதவீதமான 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொழிப்பாட மதிப்பெண்ணை 125-ல் இருந்து 100 ஆக குறைக்கலாம்” என தெரிவித்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ள, தொடக்கக் கல்வித் துறை இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்க முடிவெடுத்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திருத்தத்தை மேற்கொள்ள கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி அசோக் குமார் கூறுகையில், “இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. 10-ம் வகுப்பில் தேர்வு மதிப்பீட்டில் இத்தகைய திருத்தத்தால் கர்நாடகாவில் சுமார் ஒரு கோடி மாணவர்கள் பயனடைவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT