Published : 27 Jul 2025 05:30 AM
Last Updated : 27 Jul 2025 05:30 AM
புதுடெல்லி: ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) முன்வந்துள்ளது.
‘நல்சா வீர்பரிவார் சகாயதா யோஜனா 2025’ என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை நல்சா செயல் தலைவர் நீதிபதி சூர்ய காந்த் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்கும் வழிமுறைகளை நீதித்துறை ஆராய்ந்தது. இது குறித்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், ‘‘ நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களால் தங்களின் சொந்த சட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாது. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் வீரரால், விடுமுறை எடுத்துக் கொண்டு நாட்டின் தென் பகுதியில் உள்ள கேரளா அல்லது தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராக முடியாது. இதற்காக ராணுவத்தினரின் குடும்பங்களிக்கு சட்ட உதவிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ராணுவத்தினரின் தனிப்பட்ட வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்களில் நல்சா தலையிட்டு முறையாக ஆஜராகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT