Last Updated : 26 Jul, 2025 11:16 AM

 

Published : 26 Jul 2025 11:16 AM
Last Updated : 26 Jul 2025 11:16 AM

கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம்

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம், ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண வீரம், துணிச்சல் மற்றும் உறுதியைக் குறிக்கிறது. தேசத்துக்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் நாட்டு மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் வெற்றி தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாள், நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்!” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x