Published : 25 Jul 2025 08:24 AM
Last Updated : 25 Jul 2025 08:24 AM
புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 12 பேரையும் விடுதலை செய்து திங்கள் கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றவாளிகளை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதேநேரம், விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT