Last Updated : 24 Jul, 2025 02:15 PM

 

Published : 24 Jul 2025 02:15 PM
Last Updated : 24 Jul 2025 02:15 PM

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு - உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

குண்டுவெடிப்பால் சிதைந்த ரயில் பெட்டி

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதிமன்றம், குற்​ற​வாளி​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​ட​தாகக் கூறி 12 பேரை​யும் விடு​தலை செய்​யு​மாறு கடந்த 21-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் கடந்த 22-ம் தேதி மேல்​முறை​யீடு செய்யப்​பட்​டது. மாநில அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, மகா​ராஷ்டிர அரசின் மேல்​முறை​யீட்டை அவசர மனு​வாக விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்ள வேண்​டும் என தலைமை நீதிபதி பி.ஆர்​.கவாய் அமர்​வில் கோரிக்கை வைத்​தார்.

இதையடுத்​து, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், என். கோட்டீஷ்வர் சிங் வழக்கை விசாரித்தனர். வழக்கில் ஆஜரான துஷார் மேத்தா, திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் மகாராஷ்டிர சட்டத்தின் (MCOCA) கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகளைப் பாதிக்கும் கருத்துக்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளதாகவும் எனவே, அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், MCOCA வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கருதாது என்று தெரிவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பத் தேவையில்லை என தெரிவித்த நீதிமன்றம், அதேநேரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x