Last Updated : 23 Jul, 2025 02:32 PM

 

Published : 23 Jul 2025 02:32 PM
Last Updated : 23 Jul 2025 02:32 PM

தொடர் அமளி எதிரொலி: ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும் என்றும், மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன, இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால், நேற்று முன்தினமும், நேற்றும் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மக்களவையில் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நீடித்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அங்குள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், அவையை இன்று முழுவதும் ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார். இதனால், மழைக்காலக் கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் முழுமையாக முடங்கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x