Published : 23 Jul 2025 02:11 PM
Last Updated : 23 Jul 2025 02:11 PM
புதுடெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை இருந்தது.
முதலில், மே 24-ம் தேதி வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை, ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும், ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர மொஹோல், “இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை ஆகஸ்ட் 23, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வியூகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நேரப்படி ஆகஸ்ட் 23-ம் தேதி 11.59 மணி வரை தடை நீட்டிக்கிறது. அதாவது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 24, காலை 5.30 மணி வரை தடை நீடிக்கிறது.
இதற்கிடையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடையை அந்நாடு நீட்டித்துள்ளது. சிந்து நீதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து அந்நாடு இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க கடந்த ஏப்ரல் 24-தேதி தடை அறிவித்தது. பின்னர் அந்த தடை ஜூன் 24 வரையும், பின்னர் ஜூலை 24 வரையும் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு மாதம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT